Friday, May 6, 2011

எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் ஆனால் உண்மை:

(வீடியோ இணைப்பு)
புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறைய எதிரிகள் இருக்கின்றன. மனிதர்களைவிட பிராணிகள், பூச்சியினங்களின் வாழ்க்கைதான் போராட்டக் களமாக உள்ளது. இந்தப் பூச்சிகளுள் சிலந்தி, தன் இரையை மிகவும் தந்திரமாகப் பற்றுகிறது.


வலையைப் பின்னிவிட்டு, எப்போது பூச்சி மாட்டிக்கொள்ளும் என்று சிலந்தி காத்திருக்கும். பின்னிய வலையில் பூச்சி வந்து மாட்டிக்கொண்டதும் ஒருவகை சிலந்தி, கப்பென்று பாய்ந்து கடித்து விடும். இந்த அவசர வகை சிலந்திக்கு `நெபிலியா’ என்று பெயர். சிலந்தி வலையில் அடிக்கடி அகப்பட்டுக் கொள்வது ஒரு வகைச் சில்வண்டு தான். சிலந்திகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த வண்டுகளுக்கு ஒருவகை ஆற்றலை இயற்கை அளித்திருக்கிறது. இந்த வண்டுகளை `குண்டு வெடிக்கும் வண்டு’ என்று கூறுகிறார்கள்.


இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், பிராண வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும்.

இந்த வகை ஆற்றல் இருப்பதால் `குண்டு வெடிக்கும் வண்டு’க்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதற்கும் ஓர் எதிரியை இயற்கை படைத்திருக்கிறது. இந்த வண்டை அவசரப்படாமல் சாமர்த்தியமாகப் பிடிக்கும் தன்மை கொண்ட இன்னொரு வகைச் சிலந்தி இருக்கிறது. அதற்கு `அர்கோபி’ என்று பெயர்.
04 May 2011

No comments:

Post a Comment